2500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் | sukreeswarar temple in tirupur
2500 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க, சிவன் கோவிலை பற்றிய சிறப்புத் தகவல்களை பார்க்கலாம்.
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில், சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ளது, இந்த 2500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்.
ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இந்த சிவனுக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணத்தில் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக கோவிலின் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது.
ஆலயத்தின் வரலாறு..!
இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். அதனால், இந்த கோவில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220-ஆம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளதாக கூறப்படுகிறது.
மூலவர் சிறப்பு..!
இக்கோவிலின் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகி அம்மன் கோவிலும், சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும் உள்ளது.
ஆலயத்தின் சிறப்புகள்..!!
வேறு எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் உள்ளார். வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில் தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. அதேபோல, மூலவரை நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும்.
தொல்லியல் துறை கூறும் அதிர்ச்சித் தகவல்..!!
1952-ஆம் ஆண்டு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. அதற்காக கோவில் கற்களை பிரித்த போது, பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.
பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், இக்கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு நந்திகள் எப்படி வந்தது..!!
முதலில், இக்கோவிலில் ஒறு நந்தி தான் இருந்ததாம். கோவிலுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் மாடு ஒன்று சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துவிட்டார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்துள்ளார்.
தவரை உணர்ந்த அவர், பிராயசித்தமாக புதிய நந்தி சிலை செய்து, பழைய நந்திக்கு முன்பாக பிரதிஷ்டை செய்துள்ளார். அப்போது, பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுவிட்டார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.
அன்று அந்த விவசாயின் கனவில் சிவன் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால், பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.